வெள்ளி, 6 மே, 2011

நம் நாட்டு ஓவியக்கலை !



அழகு கலைகள் ஐந்து வகைப்படும்

ஓவியக் கலை , கட்டிட கலை , சிற்பக் கலை, இசைக் கலை , காவியக் கலை ஆகியனவாகும் .

இதில் முதலில் நம் நாட்டு ஓவியக் கலையை அறிவோம் !
என்னடா ஒளிப்படக் கலைக்கு ஒரு இணையத்தளம் என்று சொல்லிவிட்டு ஓவியத்தை பற்றி சொல்லுகிறானே என நினைக்க வேண்டாம் , உலகில் முதலில் மனிதனால் கருத்துகளை பகிர்ந்துகொள்ள பயன்படுத்தப் பட்டது ஓவியக் குறியீடுகள்தாம் . அவையே பின்னர் மொழிக்கான எழுத்தாக பயன்பட்டது .

ஓவியங்கள் நேர்கோடு , வளைந்த கோடு , கோணக் கோடு முதலிய கோடுகளாலும் , சிவப்பு , மஞ்சள், நீலம், கருப்பு, ஆகிய நிறங்களாலும் ஓவியங்கள் வரையப் படுகின்றன . சுமார் 2000, ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர் நாட்டில் ஓவியக் கலை மிக சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது . நம் நாட்டு ஓவியங்கள் பெரும்பாலும் சுவர் ஓவியங்கள்.

ஓவியங்கள் மரப் பலகை, துணிச் சீலை , முதலியவற்றிலும் , தோலிலும் வரையப் பட்டன . பண்டை காலத்தில் மன்னர்களின் அரண்மனைகள் , பிரபுக்களின் மாளிகைகள் , கோயில்களின் மண்டபங்கள், பெரு வணிகர்களின் வளமனைகள், போன்ற இடங்களில் ஓவியங்கள் வரைந்து அழகு செய்தனர். ஒவ்வொரு மன்னரின் அரண்மனைகளிலும் ''சித்திர மாடம் '' எனும் கட்டிடம் தனியே அமைந்திருக்கும் . ஏறத்தாழ கி.பி. 600 முதல் 630 வரை அரசாண்டவனும் , திருநாவுகரசர் காலத்தில் இருந்தவனுமான ''மகேந்திர வர்மன் '' எனும் பல்லவ அரசன் தனது சிறப்புப் பெயர்களில் ஒன்றாக ''சித்திரகாரப்புலி '' எனும் பெயரை பெற்றிருந்தான். இதன் மூலம் அவன் ஓவியக் கலையில் சிறந்து விளங்கினான் என்பது ஆரியப் படுகிறது. இதை காஞ்சிபுரத்திற்கு அடுத்துள்ள மாமன்மூரில் அமைந்த குகைகோயில் சாசனம் கூறுகிறது .

அடியார்ற்கு நல்லார் காலத்தில் ஓவிய நூல் இருந்துள்ளது. ஓவியத்திற்கு முறையான அளவுகலான நிற்றல் , இருத்தல், கிடத்தல், இயங்கல், எனும் செயல்பாடுகள் உள்ளன . அவை இரண்டு பகுதிகளை உடையது.
1. யானை , தேர், பூனை (?), முதலியன
2. பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிபுடம், மண்டிலம் , எகபாகம், என்பனவாகும் .

ஓவியத்தை வட்டிகை செய்தி என்பர். வண்ணம் தீட்டாத ஓவியம் புனையா ஓவியம் எனப்படும் . ''கொங்கு வேளிர்'' தமது பெருங்கதையில் கூறும் செய்திகளாவன ..
ஓவியர்கள் நகை , உவகை, அவலம், வீரம், முதலிய எட்டு வகை மெய்பாடுகளையும் இருத்தல் , நிற்றல், முதலிய ஒன்பது விருதிகளையும் , தமது ஓவியங்களில் அமைத்து வரைந்ததை விளக்குகிறது.

கி.பி. 600 குப் பின் உண்டான கோயில்கள், மண்டபங்கள், குகைகள் , கற்றளிகள், ஆகியவற்றில் எழுதப்பட்ட ஓவியங்கள் பெரும்பாலும் அழிந்து விட்டன . இருப்பினும் சித்தன்னவாசல் , குடுமியான் மலை போன்ற இடங்களில் மட்டுமே அழிந்து வரும் நிலையில் சில ஓவியங்கள் உள்ளது. அவற்றை காப்பது நம்மை போன்ற கலைஞர்களின் கடமையாகும்.

தற்போது சில இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டு அறியப்பட்டுள்ளது. அவை நமது முன்னோர்களின் காலத்தையும் , அவர்களின் வாழ்க்கை முறைகளையும் , அறிய உதவுகிறது . இப்போது நம் ஒளிப்படக் கலைக்கு முன்னோடியான ஓவியக்கலையின் சிறப்பு தெரிகிறதா நண்பர்களே .
ஓவியம் வரைய தேவையான விதி முறைகள் ஒளிப்படம் எடுக்கவும் பயன்படும் என்பது உண்மைதானே !

நூல் ஆதாரம் : தமிழர் வளர்த்த அழகு கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி .
தொகுப்பு : முருகானந்தம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக